வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி, முன்னேற்றம் அடைய புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அதிகரிக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
ஜெனிவாவில் செயல்பட்டு வரும் உலக அறிவுசார் சொத்துரிமை ஆய்வுக் கழகம், சர்வதேச அளவில் புதுமைக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் 126 நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் 2015-ஆவது ஆண்டில் 81-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 57-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 22-ஆவது இடத்தில் இருந்த சீனா 17-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதர வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் நாம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றோம். இந்த நிலை மாற ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழகம் மூலம் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தி, ஊக்குவிக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மயில்சாமி அண்ணாதுரை. விழாவில் 566 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தாகூர் கல்விக் குழுமத் தலைவர் பேராசிரியர் எம்.மாலா, ஜெருசலேம் பொறியியல் கல்லூரி இயக்குநர் எம்.ராமலிங்கம், முதல்வர் ஆர்.நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.