ஆந்திரத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு வரும் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் செங்குன்றம் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு ஆம்னி பேருந்தை மறித்து போலீஸார் சோதனையிட்டனர். இதில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ரா.ஷேக் சலாம் (56) என்பவர் ரூ.40 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார், அவரிடம் பணத்துக்குரிய ஆவணம் கேட்டு விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், அது ஹவாலா பணம் என்பதும், அந்த பணத்தை ஷேக் சலாம் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு, சென்னையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் ஷேக் சலாமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.