சென்னை மெரீனா கடற்கரை நேப்பியர் பாலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தரமணி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் கு.தீரஜ்குமார் (24), இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிபிரபு (24), மோகன்ராஜ் (24). இவர்கள் சென்னையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் 3 பேரும் வெள்ளிக்கிழமை இரவு தீவுத்திடலில் நடைபெறும் அரசு சுற்றுலா பொருள்காட்சியை பார்க்கச் சென்றனர்.
பொருள்காட்சியைப் பார்த்துவிட்டு 3 பேரும் மெரீனா கடற்கரை நேப்பியர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, சட்டக் கல்லூரி மாணவர்கள் வைத்திருந்த பணம், 3 செல்லிடப்பேசிகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.