சென்னை கண்ணகிநகரில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கட்டடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
கண்ணகிநகர், எழில்நகர் 7-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ப.மலர் (48). கணவரை விட்டு பிரிந்து இவர், அங்கு தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சில நாள்களாக பூட்டியே கிடந்த மலரின் வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள், கண்ணகிநகர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு காயங்களுடன் இறந்து கிடந்த மலரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி முருகனுக்கும், மலருக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்ததும், இருவருக்கும் இடையே சம்பவ நாளன்று தகராறு ஏற்பட்டதும், அத் தகராறில் முருகன் மலர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்தனர்.