திருவொற்றியூரில் விரைவு ரயில் என்ஜின் ஓட்டுநரை கிருஷ்ணன் (48) என்பரைத் தாக்கிய வழிப்பறித் திருடர்கள் 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் விரைவு ரயில் என்ஜின் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வட மாநிலம் செல்லும் ரயிலில் பணி செய்வதற்காக காட்பாடியிலிருந்து திருவொற்றியூர் வந்த கிருஷ்ணன், ரயில்நிலையம் அருகில் உள்ள ஓய்வறைக்குச் சென்றபோது, அவரை வழிமறித்த சிலர் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் கூச்சலிட்டாராம்.
இதையடுத்து மர்மநபர்கள் கிருஷ்ணனை கற்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிலர் தாக்குதலில் காயமடைந்த கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேஷ் (28), விஜய் (22), தேவராஜ் (20) ஆகிய
மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த மூவரும் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.