தெற்கு கூவம் சாலையில் வாகனக் கழிவுகள் அகற்றம்
புதுப்பேட்டை தெற்குகூவம் சாலையில் நீண்ட நாள்களாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அகற்றப்பட்டன.
சென்னை, புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில் வசித்து வந்த 300-க்கு மேற்பட்ட குடும்பங்கள், பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியிலிருந்த வாகனம் பழுது பார்க்கும் கடைகள், சிங்கப்பெருமாள்கோவில் அருகே இடமாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், தெற்கு கூவம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வெகு நாள்களாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வாகன உதிரிபாகங்கள் மற்றும் கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டிருந்தன. மாநகராட்சியின் ராயபுரம் மண்டல அலுவலர் தலைமையில் 75 பணியாளர்கள் இதனை அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 13 பழுதான கார்கள், 2 ஆட்டோக்கள், 2 பெட்டிக் கடைகள் மற்றும் அங்குக் கொட்டப்பட்டிருந்த கழிவுகளும் அகற்றப்பட்டன.
சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதியில் இயங்கும் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இந்தச் சீரமைப்புப் பணியின் போது 50 போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.