மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மகளிர் காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
சென்னைத் திருவான்மியூரைச் சேர்ந்த எல்.அருள்ராஜ் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: நான் ஒரு பொறியாளர். எம்பேடிக் ரிசல்ட் அகாதெமி என்னும் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கு வைஷ்ணவியுடன் 12.9.10 அன்று திருமணம் நடந்தது. நானும் எனது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாகக்கூறி எனது மனைவி தி.நகர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.ஜெயலட்சுமி என்பவரிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணைக்கு நானும் எனது தாயும் ஒத்துழைத்த போதிலும், என்னைக் கைது செய்யும்படி அவரிடம் வைஷ்ணவி வற்புறுத்தினார். அதனடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி 28.12.13 அன்று என்னைக் கைது காவலில் வைத்தார். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
பரிந்துரை: இந்த மனு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட அருள் ராஜூக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடாக தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் வழங்கிவிட்டு, அதனை மகளிர் காவல் உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமியிடமிருந்து வசூல் செய்து கொள்ளலாம் என்று கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உள்துறை முதன்மைச் செயலருக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.