சென்னை அண்ணாநகரில் வியாழக்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஒரு ஆட்டோவில் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றனர். அந்த ஆட்டோ அண்ணாநகர் ரவுண்டானா செல்லும்போது பின்னால் வந்த வேன் திடீரென மோதியதில், அதில் பயணம் செய்த அயனாவரத்தைச் சேர்ந்த சூர்யா (50), கோகிலா (40), கலையரசி (54), தனம் (37), அரசு ( 65), திலகவதி (49) , சுகுணா (54) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.