சென்னையில் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிபவர் சம்பத். இவருக்கும், அந்த காவல் நிலையத்தில் காவலர்களாகப் பணிபுரியும் சதீஷ்குமார், சிவபாலன், மனோஜ், விஜய் கார்த்திக் ஆகியோருக்கும் இடையே ஒரு புகாரை விசாரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் காவலர்கள் 4 பேரும், ஆய்வாளர் சம்பத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பத், தெற்கு மண்டல இணை ஆணையர் சி.மகேஸ்வரியிடம் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
விசாரணையில் 4 காவலர்களும், ஆய்வாளர் சம்பத்தை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 4 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, இணை ஆணையர் மகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.