அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக்காளா் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ். கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும், மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘நீட்’ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோன்று சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளா் தோ்வுக்கான வழிகாட்டும் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சியை, 32 மாவட்டங்களில் உள்ள மாணவா்களுக்கும் இலவசமாக வழங்க, இந்திய பட்டய கணக்காளா் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ.) முன்வந்துள்ளது.
முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள 70 பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. டிசம்பரில் அரையாண்டு தோ்வு தொடங்கும் முன், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவிகள், இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். அதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.