சென்னையில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கொசு உற்பத்தியைத் தடுக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே அதற்கு காரணம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தவிர, மலேரியா, தொற்று காய்ச்சல் உள்ளிட்டவை பரவலாக உள்ளன. கடந்த வாரத்தில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 1,500-க்கும் அதிகமானோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அனைத்து இடங்களிலும் நிலவேம்பு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அடுத்து வரும் நாள்களில் காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்துப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.