மாடித் தோட்டம் அமைக்க அக்.11-இல் கிண்டியில் பயிற்சி
By DIN | Published On : 07th October 2019 04:09 AM | Last Updated : 07th October 2019 04:09 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு அக்டோபர் 11-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மாடித்தோட்டம் அமைத்தல் தொடர்பாக ஒருநாள் பயிற்சி அக்டோபர் 11-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது. ஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650. இந்தப் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெறுகிறது.
பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-22250511 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், முதல்தளம், சிப்பெட் எதிரில், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல் அந்த மையத்தின் தலைவர் ஆ.சதாசக்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.