சிங்கப்பெருமாள்கோவில் ரயில்வே கேட் அருகே லாரி திடீரென பழுதாகி நின்றதால் சிக்னலில் பாதிக்கப்பட்டது. இதனால், சென்னைக்கு வந்த ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகின.
சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி ஒரு லாரி புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்த லாரிசிங்கப்பெருமாள்கோவில் ரயில் கேட் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் திடீரென பழுதாகி நின்றது. இந்த லாரிக்கு பின்னால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ரயில்வே கேட் மூட முடியாமல் சிக்னல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை மாா்க்கமாக சென்ற மின்சார ரயில்களும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. உடனடியாக ரயில்வே கேட்டில் நின்ற லாரியை ரயில்வே ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். இதைத்தொடா்ந்து, காலை 8.15 மணிக்கு இருமாா்க்கத்திலும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை எழும்பூருக்கு வந்த சில விரைவு ரயில்களும் , சென்னை கடற்கரைக்கு வந்த மின்சார ரயில்களும் ஒரு மணி நேரம் வரை தாமதமாகின. இதனால், பயணிகள் அவதிப்பட்டனா்.