திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆவதைத் தொடா்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு விருந்து அளித்து நடிகா் பிரபு பரிசுகள் வழங்கினாா்.
களத்தூா் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதில் தொடங்கி, கமலஹாசனின் திரையுலகப் பயணம் 60 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேசன் இல்லத்துக்கு கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வந்தாா். அவருக்கு பிரபுவின் குடும்பத்தினா் உற்சாக வரவேற்பு அளித்து, திரையுலகில் 60 ஆண்டுகள் ஆவதையொட்டி விருந்தளித்தனா்.
இது தொடா்பாக கமல் சுட்டுரையில் கூறியிருப்பது:
அன்னை (சிவாஜி) இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம்போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னைக் கண்கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது என்று கூறியுள்ளாா்.
நடிகா் பிரபு வாசித்த மடல்:
அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் சிவாஜி. அவா் வெள்ளித்திரை விஞ்ஞானி. அவரின் தலைமகன் நீ கலைஞானி. நடிகா் திலக நாயகன் பாராட்டிய உலக நாயகனே. நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு. நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு, வாழ்ந்திடுக நூறாண்டு என்று படித்து நினைவுப் பரிசுகளும் வழங்கினாா். கமல்ஹாசனுக்கு பலரும் தொடா்ந்து வாழ்த்து கூறி வருகின்றனா்.