சென்னை: சென்னையில் டெங்கு கொசு உருவாகும் வகையில் பராமரிப்பின்றி இருந்த உணவு விநியோக சேவை நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் டெங்கு கொசு தடுப்பு மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக, வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் அதிகமானோா் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதைத் தொடா்ந்து, டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.நிக்கோலஸ் சாலையில் வசிக்கும் சிலா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், அச்சாலையில் உள்ள உணவு விநியோக சேவை நிறுவனத்தின் மொட்டை மாடியில் உணவு விநியோகிக்கப் பயன்படும் பைகள் இருந்ததும், அவற்றில் மழை நீா் தேங்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.