அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச உபகரணங்களைப் பெறத் தகுதியான பயனாளிகளை உறுதி செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
போரூர் ராமச்சந்திரா சிறப்பு குழந்தைகள் கல்வி நிறுவனமான வித்ய சுதா பள்ளியில், நவம்பர் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும் என்றும், தகுதியான மாற்றுத் திறனாளிகள் அதில் பங்கேற்று பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
40 சதவீதத்துக்கு மேல் பார்வைத் திறன், செவித்திறன், உடல் இயக்கக் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகள் உடையோர் முகாமில் பங்கேற்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, இருப்பிடச் சான்று, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் அவரது பெற்றோர் அல்லது காப்பாளரின் வருமானச் சான்றுகள், 2 புகைப்படங்கள் ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும்.
மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு இலவசமாக உபகரணங்கள் வழங்கப்படும். ரூ.20 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் முகாமில் பங்கேற்க விரும்புவோர், வரும் 30-ஆம் தேதிக்குள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்துக்குள் அமைந்துள்ள வித்யசுதா பள்ளிக்கு நேரடியாக வந்து ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்து அவர்கள் பயனாளிகளா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-45928569, 98403 31659, 99623 44104 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.