சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான 50 சென்ட் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
மாடம்பாக்கத்தில் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான நிலம் உள்ளது. மாடம்பாக்கம் பேரூராட்சி மூவேந்தர் தெருவில் சர்வே எண் 706 ல் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை சிலர் போலியான பத்திரம் தயார் செய்து ஆக்கிரமித்து வைத்து இருப்பதாக தேனுபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் சிவகுமாருக்கு தெரிய வந்தது. உடன் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் போலி பத்திரத்தைப் பயன்படுத்தி இடத்தை ஆக்கிரமித்த சிலர் அந்த இடத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருவதைக் கண்டறிந்தனர். வெள்ளிக்கிழமை செயல் அலுவலர் சிவகுமார் உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் மீட்கப்பட்ட நிலத்தில் தேனுபுரீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான இடம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டது.