சத்குருவின் இயக்கத்துக்கு ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ ஆதரவு
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு டைட்டானிக் திரைப்பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிர் அளிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இவ்வியக்கம் மூலம், தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் 242 கோடி மரங்களை அடுத்த 12 ஆண்டுகளில் நட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்படும் மரங்கள், மண்ணின் வளத்தை அதிகரிப்பதோடு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் பயனளிக்கும். இதன் மூலம் காவிரியை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு நதியிலும் நீர்மட்டம் அதிகரிக்கும். இத்திட்டத்தை களத்தில் செயல்படுத்தவும், இதில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கவும் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றை தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், டைட்டானிக் திரைப்பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு தனது ஆதரவை முகநூல் வழியாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "இந்திய நதிகள் அருகி வரும் வேளையில் காவிரி நதிக்கு புத்துயிர் அளிக்க காவிரி கூக்குரல் இயக்கம் தொடங்கியிருக்கும் சத்குருவுடன் இணைவோம்' என்று அவர் பதிவிட்டுள்ளார். இவ்வியக்கத்துக்கு ஏற்கெனவே இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.