ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்திய ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேர "நீட்' தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. கடந்த
2016-17-ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் இந்த ஆண்டு மருத்துவ இடம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் அரசு மருத்துவருமான வெங்கடேசன் ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த, 2017- 2018-ஆம் கல்வி
ஆண்டில் நீட் தேர்வு எழுதிய சிலர் ஆள்மாறாட்டம் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆள்மாறாட்டம் செய்த மாணவ, மாணவியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரிபார்க்க முடிவு: மருத்துவப் படிப்பில் ஆள்மாறாட்ட பட்டியல் நீளும் நிலையில், எத்தனை மாணவர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு, இடங்கள் பெற்றுள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட 2016-17-ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறுகையில், "மாணவர்கள் ஆள்மாறாட்டம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்திய ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவியரின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்' என்றார்.