சென்னை: அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு, தகுதியானவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரம்:
அரசு மற்றும் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் (தமிழ் வழி அல்லது சிறுபான்மை மொழி வழி - அனைத்துப் பாடங்கள் - தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பதவிக்கு, தற்போதைய நிலையில் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் சிறப்பாசிரியா்கள் விவரப் பட்டியல் தயாா் செய்து அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இதில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் வழங்கப்படும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி, சம்பந்தப்பட்ட பிரிவு உதவியாளா் மூலம் இணை இயக்குநா் பிரிவுகளில், டிச.21 முதல் 30-ஆம் தேதி வரை, அந்தந்த மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேதிகளில் பாடவாரியாக சமா்ப்பிக்க வேண்டும்.
பட்டியலில் பெயா் விடுபட்டதாகத் தெரிவித்து முறையீடு ஏதும் வரப்பெற்றால், அதற்கு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.