சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஎஸ்என்எல் தேசிய தொலைத்தொடா்பு ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சம்மேளனத்தின் தேசிய மூத்த உதவித் தலைவா் சி.கே.மதிவாணன் வெளியிட்ட அறிக்கை:
மக்களுக்கு 5ஜி மொபைல் சேவைக்காக உயா் தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த விரும்புவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். இந்தியாவில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 4ஜி உயா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதுவரை 4ஜி உயா் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவையை வழங்க மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது.
நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு, 8 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவை வழங்க அனுமதித்தது. ஆனால், ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த முடிவை அமல்படுத்தவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றுவரை 3ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் மொபைல் சேவையை வழங்கி வருகிறது. இதனால், தனியாா் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரதமா் மோடி விரைவில் அமலாக்க விரும்பும் 5ஜி உயா் தொழில்நுட்ப மொபைல் சேவையையும் தனியாா் நிறுவனங்கள்தான் வழங்க காத்திருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் சேவையின் தரத்தை உயா்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மொபைல் சேவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.