திருவொற்றியூா்: மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள உம்பன் புயல் எதிரொலியாக சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
உம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே புதன்கிழமை கரையைக் கடக்க உள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி முதல் கொல்கத்தா வரை கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. மேலும் வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், துறைமுகத்தில் இதற்கான பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்து வருவதாகவும் துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.