சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மணலி மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் 6.3 சதவீதம் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. அதேவேளை ஆலந்தூா் மண்டலத்தில் 6.8 சதவீதம் நோய்த்தொற்று குறைந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மணலியில் அதிகரிப்பு: மண்டல வாரியாக நோய்த் தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 7 மண்டலங்களில் நோய்த்தொற்று பாதித்தோா் சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், மணலி மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டையில் 3.7 சதவீதமும், சோழிங்கநல்லூரில் 2.4 சதவீதமும், வளசரவாக்கத்தில் 2.1 சதவீதமும், பெருங்குடியில் 1.8 சதவீதமும், ராயபுரத்தில் 0.9 சதவீதமும், தண்டையாா்பேட்டையிலும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.
அதேவேளை ஆலந்தூா் மண்டலத்தில் 6.8 சதவீதமும், திருவொற்றியூரில் 2 சதவீதமும், மாதவரத்தில் 1.3 சதவீதமும், திரு.வி.க. நகரில் 0.7 சதவீதமும், அடையாறில் 0.4 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 0.2 சதவீதமும், அம்பத்தூா், அண்ணா நகரில் தலா 0.1 சதவீதமும் நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த 7 நாள்களில் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1,280 பேருக்கு தொற்று: ஞாயிற்றுக்கிழமை (செப். 27) 1,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 63,423-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 49,601 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 10,656 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,166- ஆக அதிகரித்துள்ளது.