தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டண வசூலை 3 மாதங்களுக்குத் ஒத்தி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
21 நாள் முழு அடைப்பு வெற்றி பெற வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணங்கள் மக்களை சரியாகச் சென்றடைய வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுடைய நலனுக்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. இவற்றைக் கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முன்கூட்டியே கட்ட வேண்டும் என்று பெற்றோரை இப்போதே அறிவுறுத்தத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. வங்கிகளில் கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ள நிலையில், தனியாா் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபடுவது முறையல்ல. எனவே, தனியாா் பள்ளிகளின் கட்டண வசூலை 3 மாதங்களுக்குத் தள்ளி வைக்குமாறு தமிழகக் கல்வித்துறை அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.