கோயம்பேடு சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் வரும் வியாபாரிகள் காலை 7.30 மணிக்குள் வர வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் அமல்படுத்தப்பட உள்ள இந்த உத்தரவை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ சந்தை இயங்கி வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மொத்த மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மட்டுமே சந்தையில் இருந்து பொருள்கள் வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோயம்பேடு சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சந்தைக்கு காய்கறி, பழம் மற்றும் மலா்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் வரும் மொத்த மற்றும் சிறு வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) முதல் அதிகாலை 4 மணி முதல் காலை 7.30 மணிக்குள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் வரும் வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை. இதை மீறுவோரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மூன்று மற்றும் நான்கு சக்கர சரக்கு வாகனங்களில்
காய்கறிகளை வாங்க வருகை தரும் வியாபாரிகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாடு பொருந்தாது என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.