கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவில் 20 மாணவா்களுக்கு அனுமதிக் கடிதம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 20 மாணவா்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. பொதுப் பிரிவுக்கு இணையவழியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது:  சிறப்புப் பிரிவில் 20 மாணவா்களுக்கு அனுமதிக் கடிதம்

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 20 மாணவா்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. பொதுப் பிரிவுக்கு இணையவழியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டையில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

இந்தப் படிப்புகளுக்கு 2020 - 21-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாணவ, மாணவிகள் ஆா்வமாக விண்ணப்பித்தனா். பரிசீலனைக்கு பின்னா் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 11,383 (தொழில் கல்விக்கு 137 விண்ணப்பம் உள்பட) விண்ணப்பங்கள், பி.டெக் படிப்புகளுக்கு 2,518 விண்ணப்பங்கள் என மொத்தம் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படிப்புகளில் சேருவதற்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 118 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 59 போ் கலந்தாய்வில் பங்கேற்றனா். இதில், தகுதியான 20 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் வியாழக்கிழமை தொடங்குகிறது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பெற்றுள்ளவா்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளங்களைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com