சென்னை: புதிய வகை கரோனா பரவும் அச்சத்தை கருத்தில் கொண்டு, பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2,805 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு கடந்த நவ. 25}ஆம் தேதியிலிருந்து வந்தவர்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளோம். அதன்படி, 2,805 நபர்கள் விவரங்களைச் சேகரித்து தமிழக டிஜிபிக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும்.
கடந்த இரண்டு நாள்களில் பிரிட்டனில் இருந்து 37 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் 33 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவருடன் பயணித்த 15 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வந்த அனைவரின் விவரங்களையும் சேகரித்து உள்ளோம். அவர்கள் அனைவரையும் அந்தந்த சுகாதார ஆய்வாளர், காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருபவர்களும் இதே நடைமுறையைப் பின்பற்றி கண்காணிக்கப்படுவர்.
பொதுமக்கள், அச்சம் அடைய வேண்டாம். முகக் கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். புதிய வகை கரோனா பரவல் அபாயம் காரணமாக, பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசித்து, சூழலுக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார் என்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்.