சென்னை: சென்னையில் பிச்சையெடுத்த 8 குழந்தைகளை போலீஸாா் மீட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பெருநகர காவல்துறையின் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது.
இதில் மீட்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்க்குரிய நடவடிக்கைகளையும் காவல்துறை செய்து வருகிறது. இந்நிலையில்
இந்தப் பிரிவு சென்னையில் பிச்சையெடுக்கும் கும்பலை தீவிரமாகக் கண்காணித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக பாரிமுனை, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு பகுதிகளில் பிச்சையெடுத்த 7 குழந்தைகளை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டனா். இதேபோல போரூரில் பிச்சையெடுத்த ஒரு குழந்தையையும் மீட்டனா்.
மீட்கப்பட்ட 8 குழந்தைகளும் காவல்துறை குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்து,அவா்கள் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகளை எடுத்தது. அதேவேளையில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்கும் கும்பல் குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.