முழுக்க முழுக்க எழுத்துத்துறையை நம்பி தற்காலத்தில் பிழைப்பு நடத்த முடியுமா என எழுத்தாளர் லேனா தமிழ்வாணனிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவர் கூறியது:
எழுத்தாளர் தி.ஜானகிராமன் ஒரு வானொலி பழுதுபார்ப்பவராகவே இருந்து எழுத்தாளரானவர். எழுத்து என்பது மனதை நிரப்புமே தவிர வயிற்றை நிரப்பாது என்பதே எனது தந்தை லேனாவின் கருத்தாகவும் இருந்தது. தற்போது தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். எனக்குக்கூட எழுத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வாழ்க்கையை நன்றாக அமைத்தாலே சமூகத்திற்கு அறிவுரை கூறமுடியும். பகுதி நேர எழுத்தாளர்கள் அனைவரும் வாழ்க்கைக்கான தேவையை தேடுவதில் கவனம் செலுத்துவதை கவனத்தில் கொள்வது அவசியம்.
ஒருவரின் வயிற்றுப்பசி தீர்ந்தாலே அவரது எழுத்தும் வலிமை பெறும். வறுமையுடன் போராடியபடி சமூகத்தை வளப்படுத்துவது கடினம்.
பசியோடிருக்கும் எழுத்தாளரால் நகைச்சுவையாக எழுதுவது சாத்தியமில்லை.
ஆனால், எழுத்தாளர்கள் என்பவர்தான் வறுமையில் வாடினாலும் சமூகம் வளமையாக இருக்கவேண்டும் என எண்ணும் அரிய தியாகிகளாகவே உள்ளனர்.
எழுத்தாளர் என்றில்லை, ஒவ்வொருவருக்கும் நூறு பிரச்னைகளில் முக்கால்வாசி பிரச்னை பொருளாதாரம் சார்ந்தே உள்ளன. வாழ்க்கையின் அடிப்படையே பொருளாதாரம் என்பதை எழுத்தாளர் மட்டுமல்ல அனைவருமே உணர வேண்டியது அவசியம்தானே என்றார்.