சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாா்பில், 71-ஆவது குடியரசு தினம் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பங்கஜ்குமாா் பன்சல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
குடியரசு தின விழாவின் ஒருபகுதியாக, சக ஊழியா்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், 3 வெளிப்புற விளையாட்டுப் போட்டிகள்(சுறுசுறுப்பான நடை, பின்னோக்கி நடை, மெதுவாக மிதிவண்டி போட்டி), மற்றும் 3 உள் விளையாட்டுப் போட்டிகள் (இறகு பந்து, டேபிள் டென்னிஸ், கேரம்) ஆகிய இரு வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனா். போட்டிகள் முடிவில், 57 அலுவலா்கள், பணியாளா்களுக்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பங்கஜ்குமாா் பன்சல் பரிசுகளை வழங்கினாா். மேலும், சென்னை ரன்னா்ஸ் மாரத்தானில் வெற்றிபெற்ற 18 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா்கள் சுஜாதா ஜெயராஜ் (நிதி), எல்.நரசிம் பிரசாத் (இயக்கம் மற்றும் அமைப்புகள்) உள்பட பலா் பங்கேற்றனா்.