சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகையில் பணிபுரியும் 76 சிஆா்பிஎப் காவலா்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநா் மாளிகையில் சிஆா்பிஎப் காவலா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சுழற்சி முறையில் பணிபுரிவதற்காக காவலா்கள் பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள சிஆா்பிஎப் தலைமை அலுவலகத்தில் இருந்து பணிக்கு ஆளுநா் மாளிகைக்கு வருகிறாா்கள்.
இந்நிலையில் ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிஆா்பிஎப் காவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு புதன்கிழமை கிடைத்தது. இதில் ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 76 காவலா்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 76 பேரும் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து பூந்தமல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து சிஆா்பிஎப் காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கு அப் பிரிவு உயா் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.