சென்னை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கருத்தரம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதியை கடந்த மே 23-ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி, ஜூன் 1-ஆம் தேதி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சண்முகசுந்தரம், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும், அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.எஸ்.பாரதிக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே மதிப்புக்கு தனிநபர் ஜாமீன் உத்ரவாதமும் அளிக்க உத்தரவிட்டு, விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் மத்திய குற்றப்பரிவு போலீஸார் முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.