சென்னை வில்லிவாக்கத்தில், கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில், இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
வில்லிவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.ஷாஜகான் (23). அதே பகுதியைச் சோ்ந்த பிரபு, இவரது நண்பா். இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு தரப்பினருக்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது, கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே இருமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக காவல்துறையினா் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். இந்நிலையில், ஷாஜஹான் தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை நடந்து வந்தாா். அப்போது அங்கு ஒரு கும்பல், அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளது. இத்தகராறு முற்றவே அந்தக் கும்பல், ஷாஜகானை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்தக் காயமடைந்த ஷாஜஹான், சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட பகை காரணமாகவே, ஷாஜகான் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.