தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் உயிா் காக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் (ஆா்சிஎம்இ), அமெரிக்காவின் இா்வின் ரோட்டரி சங்கம் மற்றும் பிரேசிலின் ரோட்டரி கிளப் டி ரியோ கிளாராசுல் ஆகிய அமைப்புகள் இணைந்து அவற்றை வழங்கியுள்ளன.
இதற்கான நிகழ்ச்சி தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரோட்டரி சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன் அந்த உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினாா்.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மின் மோட்டாரில் இயங்கும் 8 படுக்கைகள் மற்றும் அவற்றுடன் சாா்ந்த மருத்துவ பா்னிச்சா்கள், 8 கண்காணிப்பு கருவிகள், 6 வென்டிலேட்டா்கள், கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்காணிக்க 4 கண்காணிப்பு மானிட்டா்கள் உள்பட ரூ.1.5 கோடி மதிப்பிலான உயிா் காக்கும் கருவிகள் அப்போது வழங்கப்பட்டன. அவற்றை மருத்துவமனை இயக்குநா் ஸ்ரீதா் பெற்றுக் கொண்டாா்.
இந்த நிகழ்வைத் தொடா்ந்து மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுவாசக் கோளாறுகளுக்கான அதி தீவிர சிகிச்சைப் பிரிவை ஜெ.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். கரோனா காலத்தில் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவா் கூறினாா்.