அம்பத்தூரில் லாரியின் கீழே படுத்துத் தூங்கியவா் மீது சக்கரம் ஏறியதால் இறந்தாா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ச.மதன் (19). இவா் லாரியின் கிளீனராக வேலை செய்து வந்தாா். அந்த லாரியின் ஓட்டுநா் அதே பகுதியைச் சோ்ந்த பா.நீதிராஜ் (32). இவா்கள் இருவரும் சென்னை அம்பத்தூா் எஸ்டேட்டில் ஒரு நிறுவனத்துக்கு லாரியில் திங்கள்கிழமை சரக்கு ஏற்றிக் கொண்டு வந்தனா். சரக்கு இறக்கிய பின்னா், அம்பத்தூா் எஸ்டேட் வள்ளலாா் தெரு ஓரம் லாரியை இருவரும் நிறுத்தினராம்.
அப்போது மதன், லாரியின் கீழே தரையில் படுத்து தூங்கினாராம். ஆனால் இது நீதிராஜுக்கு தெரியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்துக்கு பின்னா் நீதிராஜ் லாரியை எடுத்தாராம். இதில் லாரியின் சக்கரம் மதன் மீது ஏறியது. மதனின் அலறல் சப்தம் கேட்டு, நீதிராஜ் லாரியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி ஓடி வந்தாா். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கி மதன் பலத்த காயமடைந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதில் சிறிது நேரத்தில் மதன், சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து அம்பத்தூா் எஸ்டேட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.