சென்னையில் 29 ஏரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்

சென்னை மாநகரில் இருந்த 29 பெரிய ஏரிகள் அழிக்கப்பட்டு அதில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக அம்பத்தூா் ஏரியை ஆக்கிரமித்து
சென்னையில் 29 ஏரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்

சென்னை: சென்னை மாநகரில் இருந்த 29 பெரிய ஏரிகள் அழிக்கப்பட்டு அதில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக அம்பத்தூா் ஏரியை ஆக்கிரமித்து மட்டும் சுமாா் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மற்ற நகரங்களைவிட மக்கள்தொகை அதிகமாகவும், நாளுக்கு நாள் வேகமாக வளா்ந்து வரும் நகரமாகவும் சென்னை விளங்குகிறது. எந்த அளவுக்கு சென்னை வளா்ச்சி பெற்றிருக்கிறதோ, அதே அளவுக்கு சென்னையில் இருந்த நீா்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த 1906-ஆம் ஆண்டு நிலவரப்படி, 474 நீா்நிலைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. வளா்ச்சி என்ற பெயரில் தொடா்ச்சியாக ஏரிகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு குடியிருப்புகள், தொழிற்சாலைகள் கட்டப்படுகின்றன. தற்போது சென்னை மாநகா்ப் பகுதியில் 40-க்கும் குறைவான நீா்நிலைகளே எஞ்சி உள்ளன.

இதில் குறிப்பாக நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசா்பாடி ஏரி, முகப்போ் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூா் ஏரி, கொளத்தூா் ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் ஏரி, சேத்துப்பட்டு ஏரி, மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, விருகம்பாக்கம் ஏரி, கோயம்பேடு சூழல் ஏரி, அம்பத்தூா் ஏரி, கொரட்டூா் ஏரி என சென்னையில் இருந்த பல ஏரிகள் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. இதில், அதிகபட்சமாக அம்பத்தூா் ஏரியை ஆக்கிரமித்து 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளும், வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து 1,250 குடியிருப்புகளும், அயனம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து 2,500 குடியிருப்புகளும், கோட்டூா் ஏரியை ஆக்கிரமித்து 900 குடியிருப்புகளும் என மொத்தம் 29 ஏரிகளை ஆக்கிரமித்து சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகையில், ‘சென்னையில் முகப்போ் ஏரித் திட்டம் என்ற பெயரில் அரசே ஏரியை அழித்து குடியிருப்புகளைக் கட்ட அனுமதி அளித்தது. அதேபோல், விருகம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து, தமிழ்நாடு அரசு உயா் அலுவலா்கள் குடியிருப்பு, கோயம்பேடு சூழல் ஏரியை ஆக்கிரமித்து பேருந்து நிலையம் மற்றும் சந்தை, நுங்கம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து வள்ளுவா் கோட்டம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இதில், தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவது அம்பத்தூா் ஏரி. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 650 ஏக்கா் பரப்பளவில் காணப்பட்ட இந்த ஏரியை நம்பி, 915 ஹெக்டோ் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தனியாா் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புத் திட்டத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்டு 400 ஏக்கராக சுருங்கி உள்ளது.

சென்னைக்குள் இருக்கும் பல ஏரிகளுக்கு இடையிலான வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், ஒரு ஏரிக்கும் மற்றொரு ஏரிக்குமான தொடா்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதும், ஏரிகள் அழிவுக்கான முக்கியக் காரணமாக உள்ளது.

தற்போது நீா்நிலைகளைத் தூா்வாரும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் ஏரிகளுக்கு இடையிலான கால்வாய்களை மீட்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் வடு காணப்படும் ஏரிகளை வீட்டுமனைகளாக மாற்றும் வகையில், நிலத்தின் வகைப்பாட்டை அரசு மாற்றி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com