சென்னை: தமிழக அரசு மேற்கொள்ளும் கரோனா நிவாரணப் பணிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சா.அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது சமூகப் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.