சென்னை: வீட்டு உபயோக மின் நுகர்வோர் கடந்த மாத மின்கட்டணத் தொகையையே இந்த மாதம் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் (வீடு மற்றும் கடைகள்) (எல்டி மற்றும் எல்டிசிடி) மின் இணைப்புகளுக்கு, 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத பட்டியலுக்கு, மார்ச் 22 முதல் 31-ஆம் தேதி வரை மீட்டர் கணக்கெடுப்பு எடுக்க முடியாததால் முந்தைய மாதப் பட்டியல் (அதாவது இந்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாத தொகையை) மார்ச் மாத கணக்கீட்டாக எடுத்து பணம் செலுத்துமாறு கோரப்படுகிறது.
மேலும், ஏற்கெனவே பயனீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள இணையதளம், வலைதள வங்கியியல், செல்லிடப்பேசி வங்கி, பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின் கட்டணம் செலுத்த மின்அலுவலகங்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.