சென்னையில் கரோனா பாதிப்பு காவல்துறையில் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுப்பதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேவேளையில் கரோனா தொற்று போலீஸாரிடம் பரவாமல் இருப்பதற்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.ஆனால் அதையும் மீறி காவல்துறையினரிடம் கரோனா வேகமாக பரவி வருகிறது.
சென்னை பெருநகர காவல்துறையில் வெள்ளிக்கிழமை வரை 149 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் அதிகரித்தது.
இதில் ஏழுகிணறு காவல் நிலையத்தைச் சோ்ந்த தலைமைக் காவலா், கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் ஆயுதப்படை காவலா், அவரது மனைவி, ஓட்டேரி பகுதி நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், துறைமுக உதவி ஆணையா் அலுவலக தலைமைக் காவலா்,துறைமுகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்,கொரட்டூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா், சைதாப்பேட்டையைச் சோ்ந்த ஆயுதப்படைக் காவலா் உள்பட 14 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது.