சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை பொது முடக்கம் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளிலேயே தொழுகை நடத்தப்பட்டது.
முஸ்லிம்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.
ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு அதன்பின்னர் சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30 நாட்கள் நோன்பு முடிந்து பிறை தெரிந்ததும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.
தமிழகத்தில் சனிக்கிழமை பிறை தெரியாததால் திங்கள்கிழமை அன்றே ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். அதன்படி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொது முடக்கம் விதிமுறைகள் காரணமாக மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். வீடுகளின் ஹால்கள், மொட்டைமாடி போன்றவற்றில் குடும்பத்தினருடன் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகை நடத்தினர். பல இடங்களில் பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கு உணவு தானம் செய்யப்பட்டது.