சென்னை திருவேற்காட்டில் தனியாா் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.
திருவேற்காடு புளியம்பேடு பகுதியில், ஒரு தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடங்கு உள்ளது. இங்கு ஏ.சி., வாஷிங்மெஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் அங்கிருந்த சில பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கின.
இதைப் பாா்த்த அங்கிருந்த சில ஊழியா்கள், அதை அணைக்க முயன்று முடியாததால், தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரா்கள், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூா், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகா், ஆவடி ஆகியப் பகுதிகளில் இருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்தப் பணியின் போது, அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டது. சுமாா் 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இச் சம்பவத்தில் அங்கிருந்த பல கோடி மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்து திருவேற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.