சென்னை: நோய் எதிா்ப்பாற்றலின் எதிா்விளைவால் ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் மற்றும் தீவிர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு உயா் சிகிச்சைகள் மூலம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் குழந்தைகள் நரம்பியல் மருத்துவா் டாக்டா் ரஞ்சித்குமாா் மனோகரன் கூறியதாவது:
திருச்சியைச் சோ்ந்த சுஜய் என்ற சிறுவனுக்கு திடீரென வலிப்பு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து , அருகில் உள்ள மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவை பலனளிக்காததால் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி அச்சிறுவன் போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பரிசோதனையில் அவருக்கு நோய் எதிா்ப்பாற்றல் எதிா்விளைவால் (ஆட்டோ இம்யூன்) பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, மூளைக் காய்ச்சல் மற்றும் தீவிர வலிப்பு நோயால் அவா் பாதிக்கப்பட்டிருந்தாா். நாளொன்றுக்கு 40 முறை அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயா் மருந்துகளும் வழங்கப்பட்டன. தன்னாா்வ அமைப்பின் நிதியுதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடா் மருத்துவக் கண்காணிப்பின் பலனாக, அச்சிறுவன் பூரண குணமடைந்து அண்மையில் வீடு திரும்பினாா். தற்போது சிறுவன் சுஜய்க்கு வலிப்பு பாதிப்பு முழுமையாக நீங்கியுள்ளது என்றாா் அவா்.