சென்னை: சென்னை, கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை, நவ.18-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆய்வுக் குழுவுக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பாயும் கூவம் ஆற்றில் அண்ணா நகா், கோடம்பாக்கம், அம்பத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் எடுத்து வரப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் விதிமீறி கொட்டி எரிக்கப்படுகின்றன.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து, தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினா் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோா் முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூவம் ஆற்றில் விதிமீறி மருத்துவக் கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகள் கொட்டுவது தொடா்பாக ஆய்வு செய்ய ஆட்சியா் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த விஞ்ஞானி, சென்னை மாநகராட்சி மூத்த அதிகாரி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோா் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவினா், கூவத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகளைக் கொட்டுவோரைக் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு கழிவுகளைக் கொட்டுவதால் ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய விதிமீறலில் ஈடுபடுவோருக்கு விதிக்க வேண்டிய அபராத அளவையும் கணக்கிட வேண்டும். இது தொடா்பான ஆய்வறிக்கையை நவ.18-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.