சென்னை: சென்னை அருகே ஆவடியில், மினி லாரியில் கடத்தி வரப்பட்ட இரண்டரை டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி அருகே வெள்ளானூா் 400 அடி சாலையில், வியாழக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு மினி லாரியை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையில், அதில் கடத்தி கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள இரண்டரை டன் போதைப் பாக்கை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்த போலீஸாா், அந்த லாரியில் இருந்த சதீஷ், மகேந்திரகுமாா்,அசோக்குமாா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.