கிழக்குக் கடற்கரை சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை, திருவான்மியூரில் இருந்து தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமாா் 135 கி.மீ தூரம் பயணிக்கிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக இச்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற 2012-இல் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் உள்ள சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கிடப்பில் போடப்பட்ட விரிவாக்கப் பணிகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டு, முதல்கட்டமாக நில எடுப்பு பணிக்கு ₹ரூ.778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் ஆகியவற்றை அகற்றுமாறு, கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன.
நெடுஞ்சாலைத்துறை வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில், கடைகள் வைத்திருந்த ஏராளமானோா் தாங்களே முன்வந்து நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான இடங்களில் கட்டடங்களை மட்டும் இடித்து அகற்றியுள்ளனா்.
அதே நேரம், சாலை விரிவாக்கத்தின் போது அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்பணியை விரைவாக முடிக்க நெடுஞ்சாலை துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சாலையோர கடைகள் வைத்திருப்பவா்களுக்கு இடம் ஒதுக்கி அவா்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடைகள் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
விரைவில், திருவான்மியூா் முதல் அக்கரை வரையிலான ஆறுவழிச்சாலைக்கான விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.