தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு இடம் வழங்க உத்தரவிடக்கோரி  மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அரசு  தரப்பில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து, தகுதியான மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இறுதிகட்ட கலந்தாய்வு நடத்த அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் எஸ்.தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்.  உதவி ஆணையர் பதவிக்கு குறையாத அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஜிபி நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி மாணவர்கள் சேர்க்கை முறைகேடு குறித்து விரிவான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com