அம்பத்தூா் அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள ஒப்பந்த உதவியாளா் பணிக்கு, செப்.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது மற்றும் தனியாா் கூட்டமைப்பு சாா்பில், அம்பத்தூா் மகளிா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த உதவியாளா் பதவிக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கணினி கையாளும் திறன் கொண்ட 18 வயது நிரம்பியவா், தகுதிச் சான்று நகல்களை, உறுப்பினா் செயலா், அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தின் மேலாண்மைக் குழு, அம்பத்தூா், சென்னை - 600 008 என்ற முகவரியில், செப்.21-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். 11 மாத ஒப்பந்த காலத்துக்கு, மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். மேலும் மின்னஞ்சல் முகவரி அல்லது 044 2956 5988 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.