சென்னை: மூத்தக் குடிமக்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று வங்கி சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா தெரிவித்தார்.
வங்கிகளை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. இதன்படி, அண்ணாசாலை இந்தியன் வங்கிக் கிளையுடன், அதே சாலையில் உள்ள அலகாபாத் வங்கிக்கிளை இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையுடன் புரசைவாக்கம் அலகாபாத் வங்கிக் கிளையும், நொளம்பூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையுடன் அதே பகுதியில் உள்ள வங்கிக் கிளையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட 3 இந்தியன் வங்கிக் கிளைகளையும் அவ்வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா திங்கள்கிழமை திறந்து வைத்தார். பின்னர், அவர் பேசியது: தற்போது வரை, இந்தியன் வங்கியுடன் 6 கிளைகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 300 கிளைகள் இணைக்கப்பட உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இணைப்புகள் மூலம், வங்கிகளுக்கு செலவுகள் குறையும். இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை கிடைக்கும்.
70 வயதுக்கு மேல் உள்ள மூத்தக் குடிமக்களுக்கு அவர்களின் வீட்டுக்கே சென்று வங்கி சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றார் எம்.கே.பட்டாச்சார்யா.