சென்னை: புறநகர் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கம் சார்பில், ரயில்வேயில் தனியார்மயமாக்கும் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் புறநகர் ரயில் சேவை இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் சந்திக்கும் பாதிப்பு தொடர்பாக விவாதமேடை நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வல் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் பாஸ்கர், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்க செயலாளர் ரங்கநாதன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். புறநகர் மின்சார ரயில் சேவை இல்லாததால், சாதாரண கூலி தொழிலாளிகள் மட்டுமின்றி, தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.