சென்னை: தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தங்களிடம் உள்ள படுக்கைகளில் குறைந்தபட்சம் 50 சதவீதம் படுக்கைகளை கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் ராஜா கூறியதாவது:
பெரிய மருத்துவமனைகளில் தனித்தனி கட்டடங்கள் இருக்கும். அதில் ஒரு கட்டடத்தில் கரோனா சிகிச்சையும், மற்றொரு கட்டடத்தில் கரோனா அல்லாத சாதாரண சிகிச்சையும் மேற்கொள்ளலாம். ஆனால் சாதாரண இரண்டாம் நிலையில் உள்ள சிறிய மருத்துவமனைகளில் மொத்தமாக 50 முதல் 60 படுக்கைகள் மட்டும் இருக்கும். அதுவும் ஒரே கட்டடத்தில் தான் அமைந்திருக்கும். அதனால் இந்த மருத்துவமனைகளில் 50 சதவீதம் கரோனா சிகிச்சைக்கு ஒதுக்குவது என்பது சாத்தியமில்லாதது.
ஒரே கட்டடத்தில் கரோனா நோயாளிகளையும், கரோனா அல்லாத நோயாளிகளையும் பராமரித்து சிகிச்சை அளிப்பது கடினம். இந்த விவகாரத்துக்கு அரசு தீர்வு காண வேண்டுமென்றால், எந்தத் தனியார் மருத்துவமனை கரோனா சிகிச்சை அளிக்க முன் வருகிறதோ, அவைகளுக்கு உரிய அனுமதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
எல்லா மருத்துவமனைகளுக்கும் கரோனா சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகள் என்பது, தேவையற்ற குழப்பங்களுக்கும், தேவையில்லாத நோய் பரவலுக்கும் வழிவகுக்கும். அதேவேளையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை அரசு நிர்ணயித்துள்ளது. அந்தக் கட்டணம் போதுமானதாக இல்லை. அதனையும் அரசு மறுபரிசீலனை செய்து, கட்டணத்தை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சை அளிக்க முன்வருவார்கள் என்றார்.